உள்ளூர் செய்திகள்
மேடவாக்கத்தில் கட்டிட பணியின் போது 2-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
- கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளி திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளச்சேரி:
மேடவாக்கம், காயத்ரி நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் புதிய கட்டிடப் பணி நடந்து வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுகுமார் தாஸ் (வயது22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் சுகுமார்தாஸ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுமார்தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.