உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண் வீட்டு முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம்

Published On 2022-07-29 07:06 GMT   |   Update On 2022-07-29 07:06 GMT
  • சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் வீட்டுக்கு சென்றார்.
  • வீட்டின் வெளியே நின்று பெண்ணை வேல்முருகன் அழைத்தார்.

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் காவேரி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேல்முருகனை அவரது மனைவி பிரிந்து சென்றார். அதன்பிறகு தனியாக வாழ்ந்த வேல்முருகனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணையும் வேல்முருகன் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வேல்முருகன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றார். வீட்டின் வெளியே நின்று அந்த பெண்ணை வேல்முருகன் அழைத்தார். ஆனால் அவர் வெளியே வரவில்லை. அந்த பெண்ணின் தம்பி வெளியே வந்து அவள் உன்னிடம் பேச மாட்டாள், நீ இங்கிருந்து போ எச்சரித்தார்.

காதலி தன்னுடன் பேச மறுத்ததால் வேதனையின் உச்சிக்கே சென்ற வேல்முருகன், மண்எண்ணெய் ஊற்றப்பட்ட தனது உடலில் தீவைத்துக் கொண்டார். தீயில் கருகி அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பலியானார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News