உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-10 04:21 GMT   |   Update On 2022-08-10 04:21 GMT
  • தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
  • வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மருதங் கோடு இலங்கன் விளை பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 56). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவரது 2-வது மகள் திவ்யா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த திவ்யா மேற்படிப்பு படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் திவ்யா நேற்று மதியம் வீட்டிலிருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரெஞ்சித் (20) என்பவர் திவ்யாவுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். திவ்யாவை காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து உள்ளார். மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தொந்தரவு செய்துள்ளார். திவ்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் அவரது வாழ்க்கையை சீரழித்து விடுவதாகவும் ரெஞ்சித் மிரட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரெஞ்சித் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெஞ்சித்தை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News