வண்ணாரப்பேட்டையில் குறும்படம் எடுப்பதாக ரூ.15 லட்சம் பண மோசடி செய்த தாய்-மகன்
- மோசடி குறித்து பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை :
கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசன்னா குமார் (வயது 33) வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரி. இவரது நண்பர் மூலம் கடந்த ஜனவரி மாதம் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் 2-வது தெருவை சேர்ந்த சுஜாதா (40) ரிஸ்வான் (23) தாய், மகன் அறிமுகம் ஆகியுள்ளார்.
தாய் மற்றும் மகன் ஆகியோர் பிரசன்னா குமாரிடம் குறும்படம் எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி குறும்படம் எடுப்பதற்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் தாய், மகன் பணத்தை வாங்கிக் கொண்டு குறும்படத்தை எடுக்காமல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு இருந்துள்ளனர்.
இது பற்றி பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமினில் சுஜாதா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகன் ரிஸ்வானை போலீசார் தேடி வருகிறார்கள்.