உள்ளூர் செய்திகள்

திருச்சியில் மனைவி கழுத்தை அறுத்து கொன்று ரெயில்வே ஊழியர் தற்கொலை முயற்சி

Published On 2022-09-17 09:44 GMT   |   Update On 2022-09-17 10:18 GMT
  • குடும்பம் நடத்துவதற்கும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கும் பலரிடம் கடன் பெற்றிருந்தார்.
  • சேகர் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா இரண்டு பேரும் பொன்மலை ரெயில்வே குடியிருப்பில் பாழடைந்த ஒரு வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

திருச்சி:

திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 67), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயசித்ரா (60). இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.

அவருக்கும் திருமணமான நிலையில் மகளும், மருமகனும் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். சேகரும், அவரது மனைவியும் முதல் தளத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சேகர் ஓய்வுபெற்றபோது கிடைத்த பண பலன்களை ஆன்லைன் மூலமாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து உள்ளார். இதில் அவருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த சில மாதங்களாகவே கவலையில் இருந்தார். எனவே குடும்பம் நடத்துவதற்கும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கும் பலரிடம் கடன் பெற்றிருந்தார்.

இதற்கிடையே கடன்தாரர்கள் தொல்லையும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் சேகர் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா இரண்டு பேரும் பொன்மலை ரெயில்வே குடியிருப்பில் பாழடைந்த ஒரு வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

தகவல் அறிந்து பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயசித்ரா பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேகருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் பங்கு மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் சேகரும் அவரது மனைவியும் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளனர்.

பின்னர் மனைவி ஜெயச்சித்ராவின் கழுத்தை அவரது கணவர் சேகர் அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேகர் சிகிச்சைக்கு பிறகு கண் விழித்து அவர் கூறும் தகவலின் பேரில் உண்மை நிலை தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News