உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை

Published On 2022-06-29 03:54 GMT   |   Update On 2022-06-29 03:54 GMT
  • குடிபோதையில் தங்கராஜ் வளர்ப்பு மகள் என்று கூட பாராமல் சிறுமிக்கு தினசரி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
  • பாலியல் தொல்லை தாங்க முடியாததால் சிறுமி தொண்டாமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்தபடி 10-ம் வகுப்பு படித்து முடித்தார்.

கோவை:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவரது மனைவி சாரசா. இவர்கள் 2 பேரும் கோவை தடாகம் வீர பாண்டிபுதூரில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் பாலக்காட்டை சேர்ந்த உறவினர் மகளான 11 வயது சிறுமியை வளர்த்து வந்தனர். அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளில் சேர்த்தனர். அவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

தங்கராஜூக்கும், அவரது மனைவி சாரசாவுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. போதை தலைக்கேறிய நிலையில் சாரசா தூங்கி விடுவார். அப்போது தங்கராஜ் வளர்ப்பு மகள் என்று கூட பாராமல் சிறுமிக்கு தினசரி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாததால் சிறுமி தொண்டாமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்தபடி 10-ம் வகுப்பு படித்து முடித்தார்.

தற்போது 17 வயதான அவர் பாலக்காடு சென்றார். பின்னர் அவர் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து அங்குள்ள குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பாலக்காடு போலீசில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்ததால் பாலக்காடு போலீசார் இந்த வழக்கை மாற்றி அனுப்பினர். அதன் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News