விருகம்பாக்கத்தில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரருக்கு மிரட்டல்- நடிகையின் மகன் கைது
- ஐதராபாத்தில் பதுங்கி இருந்த விக்னேஷ்குமார் மீண்டும் சென்னை திரும்பியதாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- விக்னேஷ்குமார், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.
போரூர்:
பிரபல தமிழ் சினிமா பட கவர்ச்சி நடிகை மாயா. இவர் சாலிகிராமம் புஷ்பா காலனியில் மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்(42). ரவுடியான இவர் மீது அடிதடி, போலீசை தாக்கியது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.
கடந்த மாதம் 18-ந்தேதி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த விக்னேஷ்குமார் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜகுமாரிடம் ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த விக்னேஷ்குமார் மீண்டும் சென்னை திரும்பியதாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மேலும் அவர், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் பறித்து சென்றதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் அருகே காரில் சென்ற விக்னேஷ்குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது காரில் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான விக்னேஷ்குமார் மீது வழிப்பறி, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.