உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஆசிரியை வீட்டில் 27 பவுன் நகை திருடிய கணவன்-மனைவி கைது

Published On 2023-11-02 05:30 GMT   |   Update On 2023-11-02 05:30 GMT
  • வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.
  • கொள்ளை குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாதா கோவில் அருகே தெற்கு பீச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி (வயது 65). இவரது மனைவி செல்வி, ஓய்வுபெற்ற ஆசிரியை.

இவர்களது மகளுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் சென்று விட்டனர்.

இந்நிலையில் அவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஜெய்ஸ் (32), அவரது மனைவி ஆஷா (29) ஆகியோர் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.

இதனால் பக்கத்து வீட்டில் இருந்த சாவியை கொடுக்க சொல்லி அவர்கள் கூறியதும் அதனை வாங்கிக் கொண்டு பிளம்பிங் வேலை பார்த்துள்ளனர். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வீட்டு உரிமையாளர் ஆசிரியை வீட்டில் இருந்த 27 பவுன் தங்க நகைகளை திருடி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்த திருமணி, செல்வி தம்பதியினர் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஆஷா,ஜெய்ஷ் ஆகிய இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் இன்று கைது செய்த போலீசார், 27 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News