உள்ளூர் செய்திகள்
முகமூடி ெகாள்ளை நடந்த வீட்டில் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்த காட்சி.

மின்வாரிய அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-11-21 04:12 GMT   |   Update On 2022-11-21 04:12 GMT
  • போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
  • வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.

பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News