அம்பை அருகே காரில் வேகமாக சென்றதை கண்டித்த 2 வாலிபர்களுக்கு சரமாரி வெட்டு
- நண்பர்களான முகமது உஸ்மானி, முகமது நசீர் ஆகியோர் இடைகால்-அம்பை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
- அக்கம்பக்கத்தினர் வெட்டுப்பட்ட 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நெல்லை:
முக்கூடலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பைசல். இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முகமது உஸ்மானி(19), முகமது நசீர்(16) ஆகியோர் நேற்றிரவு இடைகால்-அம்பை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பைசல் மீது லேசாக உரசிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பைசல் மற்றும் அவர்களது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு காரை பின்தொடர்ந்துள்ளனர்.
அம்பை அருகே கோவில்குளத்தில் வைத்து காரை வழிமறித்து 3 பேரும் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் தனது காரில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதில் முகமது உஸ்மானிக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. முகமது நசீருக்கு இடது கையில் பலத்த வெட்டு விழுந்தது.
உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.