காயல்பட்டினத்தில் கார் மோதியதில் சிறுவன் படுகாயம்
- பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீட்டிற்கு வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
- விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்து அவன் அலறி துடித்தான்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (64). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்து ரோஷன் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கோமான் மேலத்தெருவில் வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்தது. அவன் அலறி துடித்தான். உடனே அக்கம் பக்கத்தினர் அவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை ராம்குமார் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த முகமது பாசில் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.