உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே பட்டாசு வெடித்து 5 சிறுவர்கள் படுகாயம்

Published On 2024-06-16 14:15 IST   |   Update On 2024-06-16 14:15:00 IST
  • கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
  • பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

மயிலம்:

மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News