உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பெருமாள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெருமாள் வழக்கம் போல கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.