நிலக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- நிலக்கோட்டை சாலை பகுதிகளில் கடைகளுக்கு முன்பாக சிலர் தகரக் கொட்டகை, சிறிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர்.
- ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட மதுரை - பெரியகுளம் சாலை, அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலை பகுதிகளில் கடைகளுக்கு முன்பாக சிலர் தகரக் கொட்டகை, சிறிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.
பொதுமக்கள் பல்வேறு வகையில் சிரமப்பட்டு கொண்டு வந்தனர். இதனை அகற்றப் நெடுஞ்சாலைத்துறைக்கு நிலக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் வீரன் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர்.
இதனை அறிந்த சிலர் தானாகவே முன் வந்து பொருட்களை அகற்றி கொண்டனர். ஒரு சிலர் அகற்றாமல் இருந்ததால் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்தப் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் யோகவேல்முருகன், அன்பையா உள்பட ஊழியர்கள் ஈடுபட்டனர். நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.