வாரச்சந்தை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
- ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வாரச்சந்தை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- கடைகள் ஆக்கிரமிப்பால் பஸ்சை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமம் அடைகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சந்தை நடக்கிறது. சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
சந்தைக்கு இடவசதி இல்லாததால் வியாபாரிகள் ரோட்டில் கடை விரித்து இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வியாபாரம் செய்கின்றனர். தற்போது ரோட்டோரங்களில் இடம் இல்லாததால் பஸ் நிலைய வளாகத்திற்குள் தன்னிச்சையாக நீண்ட வரிசையில் தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பஸ்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலையில் சந்தை வியாபாரிகளும் கடை விரித்து விட்டதால் பஸ்சை இயக்குவதற்கு டிரைவர்கள் சிரமம் அடைகின்றனர். பஸ்கள் வருவது கூட தெரியாத நிலையில் மக்கள் அலை மோதி வருகின்றனர்.
இதனால் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.சந்தை பகுதியில் போலீசாரும் பாதுகாப்புக்கு கிடையாது. இதன் காரணமாக பஸ்நிலைய வளாகத்தில் நடை பாதை கடைகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான முறையில் வாரச்சந்தை இயங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.