உள்ளூர் செய்திகள்

விதி மீறும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

Published On 2022-08-24 07:58 GMT   |   Update On 2022-08-24 07:58 GMT
  • விதி மீறும் வாகனங்களால் விபத்து அதிகரித்துள்ளது.
  • ஆனால் பெரும்பாலான டிரைவர்கள் இதனை பின்பற்றுவதில்லை.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறுகிய சாலை வசதிகளால் அடிக்கடி விபத்துகளும் தேவையில்லாத உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

சாலை விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு வாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் எவ்வித பயனில்லை. அதிவேகம், சாலை விதிமீறல், வாகனங்களை கண்காணிப்பதில் மெத்தனம் உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது.

கருப்பு ஸ்டிக்கர்

வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வருவதால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் நிலை தடுமாறுகின்றனர். எதிரே வாகனங்கள் வரும்போது முகப்பு வெளிச்சத்தை குறைக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் பெரும்பாலான டிரைவர்கள் இதனை பின்பற்றுவதில்லை.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர்.

ராமநாதபுரம் பகுதியில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News