ஆலங்குடி அருகே 196 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்
- தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 196 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த பரூக்(61), கீழாத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (40), ராஜா(31) ஆகிய பேரையும் கைது செய்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.