தமிழ்நாடு

கண்காணிப்பு கேமிராவில் பதிவான பெண் உருவத்தை படத்தில் காணலாம்.

நள்ளிரவு நேரங்களில் நடமாடும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சம்

Published On 2024-05-10 05:14 GMT   |   Update On 2024-05-10 05:14 GMT
  • 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
  • சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தங்க சாலை வீதி மற்றும் சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இந்த குடியிருப்பு பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பு.புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் வந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

இதே போல் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு தங்கசாலை வீதியில் உள்ள வீடுகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டார்ச் லைட் அடித்து பார்ப்பதாகவும் வந்து பார்த்தால் அவர்கள் ஓடி விடுவதாகவும், மர்ம நபர்கள் பகல் நேரங்களில் நோட்டம் விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் பெண் முகத்தை முழுவதும் துணியால் மறைத்து மாஸ்க் அணிந்து புடவை கட்டி உள்ளார். இதை பார்த்தால் அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் பெண்களைப் போல் வேடமிட்டு வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் புளியம்பட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருவது அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து பயமின்றி இருக்க புளியம்பட்டி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாடி வருவதையும் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்ப்பதற்கு நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெளிச்சம் இல்லாத இடங்களில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பல பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News