இரண்டு தோல்விகளுக்கு பிறகு மீண்டும் 'பி.எஸ்.எல்.வி.' ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டம்- மத்திய மந்திரி தகவல்
- சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும்.
- கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டிலும் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்ட ராக்கெட் என்ற பெயரை 'பி.எஸ்.எல்.வி.' ரக ராக்கெட் பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின், 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.
அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது.
அப்போது, ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.
இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
இஸ்ரோவின் 2 பி.எஸ்.எல்.வி. தோல்விகளைத் தவிர, கடந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய வழி செலுத்தல் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-02, விண்கலத்தின் 'திரஸ்டர் வால்வு' செயலிழப்பு காரணமாக அதுவும் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.