தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்
- புதிய ரேஷன் கார்டுகள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது.
- தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டாலும், அதற்கு உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் குடும்ப அட்டைகள் கொண்டு ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக திருமணமானவர்கள் அல்லது உடன் இருந்தவர்கள் யாரேனும் இறந்தாலோ அவர்களில் பெயர் நீக்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ரேஷன்கார்டுகள்
புதிய ரேஷன் கார்டுகள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பழைய குடும்ப அட்டைகளில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் புதிய அட்டைகள் வேண்டி ஆன்லைன் மூலம் பதிந்து பல மாதங்கள் காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால், தங்களுக்கு இன்னும் குடும்ப அட்டைகள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அது குறித்து ஏதும் தகவல் தேவை என்றால் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்குமாரும் வலியுறுத்தி வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டாலும், அதற்கு உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
தற்போது குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான தகவல் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் அதன் காரணமாகத்தான் புதிய குடும்ப அட்டைகள் இன்னும் வழங்கப்படவில்லையோ என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே இதனை உடனடியாக தென்காசி மாவட்ட கலெக்டர் தலையிட்டு புதிதாக குடும்ப அட்டை வேண்டி பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்பவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.