உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு

Published On 2022-08-11 03:14 GMT   |   Update On 2022-08-11 03:14 GMT
  • வகுப்பறையில் இருந்த மாணவி அஸ்வினி, வாயில் நுரைதள்ளியவாறு திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகள் அஸ்வினி (வயது 17). இவர் மாம்பழப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். 10.30 மணியளவில் வகுப்பறையில் இருந்த மாணவி அஸ்வினி, வாயில் நுரைதள்ளியவாறு திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதை பார்த்ததும் சக மாணவ- மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே பள்ளி ஆசிரியர்கள் விரைந்து சென்று மாணவி அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்படும்போதே விஷம் குடித்து விட்டு வந்ததாக கூறினார். பின்னர் மாணவி அஸ்வினியை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த காணை போலீசார், மாம்பழப்பட்டு பள்ளிக்கு நேரில் சென்று அங்கிருந்த மாணவியின் சக தோழிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News