பல்லடம் அருகே ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டு தர கோரிக்கை
- கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.
- கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் ராஜசேகரன் தலைமையில் சேடபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் நகராட்சி 2 வது வார்டு சேடபாளையத்தில் பிள்ளையார், மாரியம்மன், மாகாளியம்மன், சென்னியாண்டவர் கோயில்கள் உள்ளன. இவை சுமார் 200 ஆண்டுகள் பழமையானவையாகும். தற்போது இந்த கோயில்கள் சிதிலமடைந்த காரணத்தினால் புதிய கோயில் கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளோம். நாரணாபுரம் கிராமம் நத்தம் சர்வே எண் 687 சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் மைதானத்தை சுத்தம் செய்து புதிய கோயில் கட்டட பணிகளை தொடங்க உள்ளோம். கோயில் நிலத்திற்கு அருகில் உள்ள தனிநபர் ஒருவர் கோயிலுக்கு சொந்தமான இடத்தையும், பொது கிணற்றையும் ஆக்கிரமித்து அதில் மதில் சுவர் மற்றும் குடியிருப்புகள் கட்டியுள்ளார். கோயில் திருப்பணி தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தரவேண்டும். மேலும் அதே பகுதியில் நத்தம் சர்வே எண் 148 சாலையில் நீரோடையினை முழுமையாக ஆக்கிரமித்து குடியிருப்புகளுக்கு கழிவறைகள் அமைத்துள்ளார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். அந்த இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல கோரிக்கை மனுவை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடமும் பொதுமக்கள் அளித்தனர்.