நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பினர் கைது
- தனியார் கல்லூரிகளில் அரசின் ஆணைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி மூட்டா அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஐகிரவுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அரசு உதவி பெறும் 2 தனியார் கல்லூரிகளில் அரசின் ஆணைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி மூட்டா அமைப்பினர் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கோஷங்கள்
இதன் ஒரு பகுதியாக பாளையில் உள்ள அந்த தனியார் கல்லூரி முன்பு இன்று மூட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் நசீர் அகமது, கோமதிநாயகம், சிவஞானம் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பெருமாள், சுடலைராஜ், வக்கீல் பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மறியல்
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஐகிரவுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 15 நிமிடம் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனே பாளை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பாளை நூற்றாண்டு மண்டபத்தில் தங்க வைத்தனர்.