பாளை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி-பிறந்தநாளில் சோகம்
- மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுபாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது 23).
பிறந்தநாள்
இவர் மார்த்தாண்டத்தில் டைல்ஸ் கட்டிங் செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது இவரது பெற்றோர் மதுரையில் வசித்து வருகின்றனர்.
இன்று சுபாசுக்கு பிறந்தநாள் என்பதால் மார்த்தாண்டத்தில் வேலையை முடித்துவிட்டு நேற்றிரவு சம்பளத்தை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
தடுப்புச்சுவரில் மோதல்
இன்று அதிகாலை ரெட்டியார்பட்டி மலை அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுபாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.