25.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்து மதுரை ரெயில்வே சாதனை
- 25.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்து மதுரை ரெயில்வே சாதனை படைத்துள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பசுமை மின்சார பயன்பாட்டுக்காக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 5 காற்றாலைகளை நிறுவி உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி, ரூ.74 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த காற்றாலைகள் தலா 2.1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உடையவை.
இந்த காற்றாலைகளில் இருந்து நடப்பாண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.14.54 கோடி மின்சார செலவு குறைந்துள்ளது.
கடந்த 3 1/2 ஆண்டுகளாக ஜூலை மாதம் வரை, ஒட்டுமொத்தமாக 91.564 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.48.54 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றாலைகளில் இருந்து ஜூலை 13-ந் தேதி முதல் முறையாக அதிக அளவில் 2,61,412 கிலோ வாட் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார ரெயில்கள் இயக்குவதற்காக, கடந்த ஆண்டு 1.86 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.