உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

Published On 2022-08-01 08:34 GMT   |   Update On 2022-08-01 08:34 GMT
  • மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மின் விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் செக்கானூரணியில் 8-ம் வகுப்பு மாணவன் குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை செக்கானூரணி மனோகரன் மகன் பாலமுரளி (வயது 14). இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுரளியின் தந்தை மனோகரன், அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பாலமுரளி இரவு கடைக்கு சென்றார். அப்போது மட்டன் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை தற்செயலாக திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாலமுரளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News