சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உள்பட 5 பேர் மீது வழக்கு
- சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
- குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்தனர்
கரூர்:
குளித்தலை அருகே குழந்தைத் திருமணம் செய்துக்கொண்ட தாய் மாமன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மனைவி நாச்சியம்மாள். இவர்கள் மகன் ராஜா (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தாய்மாமன் ஆவார். இவருக்கும், அச்சிறுமிக்கும், குமாரமங்கலம் மாரியம்மன் கோயில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை குழந்தைகள் நல அலுவலர் சரோஜா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறுமியின் தாய்மாமன் ராஜா, அவர் தந்தை கோவிந்தராஜ், தாய் நாச்சியம்மாள், சிறுமியின் தந்தை குமார், தாய் சித்ரா ஆகிய 5 பேர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.