search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case"

    • இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
    • இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன.
    • 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏ.டி.ஆா்.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தற்போது பாராளுமன்ற எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் 225 போ் (44 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவா்களுள் 29 சதவீதம் போ் மீது கொலை, கொலை முயற்சி, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உண்டாக்குதல், கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய மிகத் தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

    தீவிர குற்றச்செயல்களில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 9 போ் மீது கொலை வழக்குகள் உள்ளன. அவா்களில் 5 போ் பா.ஜ.க.வைச் சோ்ந்தவா்கள். அதேபோல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 28 எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுள் 21 எம்.பி.க்கள் பா.ஜ.க.வைச் சோ்ந்தவா்கள்.

    பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக 16 எம்.பி.க்கள் மீது வழக்குகள் உள்ளன. அவா்களுள் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிகமான கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உள்ளன. மற்ற கட்சிகளில் இருந்தும் கணிசமான எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

    அந்த வகையில் நகுல்நாத் (காங்கிரஸ்) முதல் இடத்திலும் டி.கே. சுரேஷ் (காங்கிரஸ்) 2-ம் இடத்திலும் ரகுராமா கிருஷ்ண ராஜு (சுயேட்சை) 3-வது இடத்திலும் உள்ளனா்.

    உத்தரபிரதேசம், மராட்டியம், பீகாா், ஆந்திரா, தெலுங்கானா, இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 50 சதவீதத்தும் மேலான எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

    தற்போது மக்களவையில் 73 சதவீத எம்.பி.க்கள் பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்கின்றனா். மக்களவையில் மொத்தமாக 14 சதவீத பெண் எம்.பி.க்களே உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை ஊராட்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 38). இவர் தி.மு.க. முன்னாள் நிர்வாகி.

    இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தொழில்அதிபரும், உறவினருமான கர்நாடகா மாநிலம் அனிகிரிப் பள்ளியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (30) என்கிற இளைஞருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது உறவினர்  வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணி அளவில் பேரிகைக்கு திரும்பும்போது ஓசூர் அடுத்த சூலகுண்டா என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கார்த்திக்கை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உடனே பிரதாப் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் குறித்து தகலவறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும் என 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை தனிப்படையினர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

    தி.மு.க. நிர்வாகி நிலத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு.
    • எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

    மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

    ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

    இதைதொடர்ந்து, கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.

    • திருமணத்தின் போது 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
    • மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார்.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் பாரதியார் மெயின்ரோடு திரவுபதி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் மகள் அனுசுயா (வயது 28). இவர் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த பேராசிரியரான விஜய் என்பவரை காதலித்து 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எங்கள் வீட்டின் சார்பில் 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்தநிலையில் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் விஜய் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு எனது பெற்றோர் அளித்த நகைகளை ரூ.12 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.

    மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தில் அவரது கள்ளக்காதலியின் பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதை கண்டித்த என்னை மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்து வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

    மனுவை பரிசீலித்த போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை சித்ரவதை செய்ததாக அனுசுயாவின் கணவர் விஜய், மாமியார் ஜெயலட்சுமி, கணவரின் சகோதரி சுகப்பிரியா, சுகப்பிரியாவின் கணவர் சிவயோகம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×