தக்கலை அருகே ரூ. 2½ கோடி மோசடி - 5 பேர் மீது வழக்கு
- 2 கோடியே 64 லட்சம் கொடுத்துள்ளேன். அதன் பிறகு மீதி பணத்தை தருவதாகவும் அந்த இடங்களை கிரயம் செய்து தருமாறு கேட்டேன்
- ஜார்சன் ரூபன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமாரபுரம் அருகே சரல் விளையைச் சேர்ந்தவர் முத்தையன் (வயது73).இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ஜார்சன் ரூபன் (வயது 27). இவருக்கு சொந்தமான நிலம் வியன்னூர் கிராமத்தில் உள்ளதாகவும், காட்டாதுறை பகுதியில் 3 மாடி கட்டிடம் இருப்பதாகவும், என்னிடம் கூறினார். அதை ரூ. 5 கோடியே 50 லட்சத்திற்கு விலைக்கு தருவதாக கூறினார். இதையடுத்த நான் அவரிடம் பல தவணைகளில் ரூ. 2 கோடியே 64 லட்சம் கொடுத்துள்ளேன். அதன் பிறகு மீதி பணத்தை தருவதாகவும் அந்த இடங்களை கிரயம் செய்து தருமாறு கேட்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது.எனவே ஜார்சன் ரூபன் அவரது மனைவி பிரபா மற்றும் உறவினர்கள் சந்திரகலா, ஜார்சன்யா, விக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா இந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டார். இதை அடுத்து ஜார்சன் ரூபன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.