உள்ளூர் செய்திகள்

குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம்

Published On 2022-07-29 06:49 GMT   |   Update On 2022-07-29 06:49 GMT
  • தடைக்காலம் 31-ம் தேதியுடன் முடிகிறது
  • படகுகளில் ஐஸ்கட்டிகள் ஏற்றும் பணி தொடங்கியது

கன்னியாகுமரி:

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை பகுதிகளில் கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூலை 31 -ம் தேதி (நாளை மறுநாள்) நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன.இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது, பெயிண்டு அடிப்பது, பேட்டரி மற்றும் ஓயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் 31 ம் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் நீங்குகிறது.தடை நீங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.தவிர மீன்பிடி உபகரணங்களையும் தயார் செய்து வருகின்றனர். தற்போது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் ஈடுப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள் நள்ளிரவுடன் விசைப்படகுகளுக்கு தடை நீங்குவதால் விசைப்படகினர், மீன் சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News