உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே காமலாபுரம் அரசு மதுபான பாரில் போலீசார் அதிரடியாக ஆய்வு செய்த காட்சி.

அனுமதி பெறாமல் அரசு டாஸ்மாக் கடையில் பார் நடத்தியவர் கைது

Published On 2022-07-10 08:57 GMT   |   Update On 2022-07-10 08:57 GMT
  • 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
  • இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தின் வழியாக சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை ஒட்டியே 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடையிலும் தினமும் சராசரியாக 5 லட்ச ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார் அமைத்தவர்கள் அங்கு மது வந்து வாங்கி செல்பவர்களை படம் பிடிக்கும் வகையில் சி.சி.டி.வி கேமரா பொருத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு பார் நடத்த உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஒருசிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இரண்டு கடைகளுக்கும் சேர்த்து பார் நடத்தி வருவதாகவும், கடை அருகிலேயே இறைச்சி வறுவல், தின் பண்டங்கள் விற்பனை, மது குடிக்கும் கூடம், வெட்டவெளியில் அமர்ந்து மது குடிக்க மேசை நாற்காலிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் அதிரடியாக காமலாபுரம் மதுக்கடை பாரில் ஆய்வுகள் செய்தனர். தொடர்ந்து அங்கு கடை அமைத்து வறுவல்கள், தின் பண்டங்களை விற்பனை செய்த, சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், அங்கே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த நபர்களை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுப்பிரமணி மீது அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார் நடத்தப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல காமலாபுரம் மதுக்கடையில் உரிய அனுமதி இல்லாமல் பார் நடத்துவதை சேலம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News