தொடர் விபத்தை தடுப்பதற்காக வள்ளியூர் நெடுஞ்சாலை வேகத்தடையில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும்- பா.ஜனதாவினர் மனு
- வள்ளியூர்-விஜயாபதி நெடுஞ்சாலையில் ராதாபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி அருகே சமீபத்தில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டது.
- திடீரென அமைக்கப்பட்ட அந்த வேகத்தடையால் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
பணகுடி:
வள்ளியூர்-விஜயாபதி நெடுஞ்சாலையில் ராதாபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி அருகே சமீபத்தில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டது.
திடீரென அமைக்கப்பட்ட அந்த வேகத்தடையால் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுவரை 15-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் உள்ள வேகத்தடையால் விபத்துக்களில் சிக்கி உள்ளதாகவும். அதற்கு காரணம் வேகத்தடை உள்ளது என்று எச்சரிக்கை செய்யும் விதமாக தகவல் பலகை இல்லாதது தான் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே வேகத்தடை மீது இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்றும் ராதாபுரம் பா.ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் மணி தலைமையில் பா.ஜனதாவினர் ராதாபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது வக்கீல்கள் பொன்னுசாமி, தனசேகர், சுந்தரம், ராதை காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.