உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி சுப்பையா திடீர் தர்ணாவில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா போராட்டம்- 10 மாதமாகியும் நிலத்தை அளக்க வரவில்லை என புகார்

Published On 2023-08-17 09:26 GMT   |   Update On 2023-08-17 09:26 GMT
  • சுப்பையா தனது நிலத்தை அளக்க நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.
  • சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க சுப்பையா அனுமதி கேட்டிருந்தார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்ற சுப்பையா. விவசாயி. இவர் தனது நிலத்தை அளக்க வேண்டும் எனக்கூறி நில அளவை பிரிவில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் 10 மாதங்களை கடந்தும் நிலத்தை அளக்க சர்வேயர் யாரும் வராததால் தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு சர்வே பிரிவை சேர்ந்த அலுவலர்களை வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். ஆனாலும் அதன்பின்னரும் தனக்கான இடத்தை அளவீடு செய்ய வராமலும், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்காமலும் இருப்பதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சுப்பையா திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நில அளவை பிரிவு அதிகாரிகள் நேரில் வந்து அவரிடம் அளக்க வேண்டிய நிலங்களை உரிய முறையில் அளந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News