மக்கள் நலத்திட்டங்களில் தி.மு.க அரசுக்கு கவனம் இல்லை-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
- கருமத்தம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
- ஒரு சில சதவீதங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
சூலூர்,
கோவை கருமத்தம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சூலூர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கந்தவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மற்றும் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து ெகாண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க அசைக்க முடியாத எக்கு கோட்டை. ஒரு சில சதவீதங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அரசின் ஒரே சாதனை அ.தி.மு.க.வினரின் வீடுகளில் ரெய்டு நடத்துவது, பொய் வழக்குகளை போடுவது மட்டும் தான். மக்களின் நலத்திட்டங்களில் திமுக அரசுக்கு கவனம் இல்லை.
விசைத்தறி தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருந்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில் மின்சார கட்டண உயர்வு அவர்களுக்கு மிகப்பெரியை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற பாராளு மன்ற தேர்தலில் அதிமுக 40-க்கு 40 என்கிற அளவில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறும். மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் முதல்-அமைச்சராக அமர்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.