உள்ளூர் செய்திகள்

சென்னையில் 30 இடங்களில் பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் மனு: போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிரடி

Published On 2023-08-11 07:12 GMT   |   Update On 2023-08-11 07:12 GMT
  • மாணவர்கள் மேற் கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
  • போலீசார் மாணவர்களை கட்டுப்ப டுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

சென்னையில் மாநகர பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போதிலும் மாணவர்கள் பஸ்களில் ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரில் 57,44 33சி, 102, 15, 2ஏ ஆகிய மாநகர பஸ்களில் ஜன்னல்களில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். மேற் கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை தட்டிக் கேட்கும் டிரைவர், கண்டக்டர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இதுபோல மாநகரில் சுமார் 30 இடங்களில் ரகளையில் ஈடுபடுகிறார்கள். இந்த இடங்கள் எவை எவை என்று குறிப்பிட்டுள்ளோம்.

பட்டாளம், புரசைவாக்கம், அயனாவரம், பெரம்பூர், தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு வொற்றியூர், வியாசர்பாடி, நந்தனம், தாம்பரம், வண்டலூர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆவடி-அம்பத்தூர் சாலை, காமராஜர் சாலை, நியூ ஆவடி ரோடு உள்ளிட்ட இடங்களில் காலை மற்றும் மாலை வேளையில் போலீசாரை நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தொல்லை குறையும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் மாணவர்களை கட்டுப்ப டுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News