இரட்டை மடி வலை பயன்படுத்திய 11 விசைப் படகுகள் மீது வழக்கு
- நடேசராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோர் கடலில் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர்.
- இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது.
பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் அருகே தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் கரையோரத்தில் மீன் பிடி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நாகப்பட்டினம் மீன் துறை இணை இயக்குனர் ஆணையின்படி, தஞ்சாவூர் மீன் துறை உதவி இயக்குனர் சிவகுமார் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் மீன் துறை ஆய்வாளர் துரைராஜ், வேதாரண்யம் மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோர் கடலில் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது முத்து ப்பேட்டை செல்லக்கண்ணு வாய்க்கா லுக்கு நேரே மூன்று நாட்டிகல் மைலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும், மல்லிபட்டினத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளும் அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது.
மேலும் மூன்று நாட்டிகல் மைலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றும் கண்டறி யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட 11 விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.