உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு
- அப்போது வெளியே இருந்த கடைகளை சந்தைக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
- இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சந்தைக்கு வெளியே கடை அமைத்து வியாபாரம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது வெளியே இருந்த கடைகளை சந்தைக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருட்களான காய்கறிகள், கீரைகள் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சந்தைக்குள் மட்டும் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடியை தீவிரபடுத்தவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த கலைஞர் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் வழங்குவது குறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வில் பாபநாசம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பரிமேலழகன் உடன் இருந்தார்.