பாலக்கோடு அருகே இன்று காலை விபத்து: அரசு பஸ் மரத்தில் மோதி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது பஸ் மோதியது.
- விபத்தில் சிக்கிய பஸ்ஸை அப்புறப்படுத்தினர்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று தருமபுரி நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. வெள்ளி சந்தை பகுதியில் உள்ள சூடப்பட்டி என்ற இடத்தருகே பஸ் சென்ற போது முன்னால் ஒரு டிப்பர் லாரி சென்றது.
அந்த லாரியை பஸ் முந்த முயன்றது. எதிரில் வேறு ஒரு லாரி வரவே மோதிக்கொள்வதை தவிர்க்க பஸ் டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது பஸ் மோதியது.
இதனால்பஸ் கண்ணாடிகள்,இருக்கைகள் உடைந்து நொறுங்கின. இதில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த மஹேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். விபத்தில் சிக்கிய பஸ்ஸை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.