வானூர் அருகே மின்கம்பிகளை திருடச் சென்ற வாலிபர்: மின்சாரம் தாக்கி பலி
- வானூர் அருகே மின்கம்பிகளை திருடச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
- இவரது நண்பர்கள் ராகுல் சிவதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் சேதுராப்பட்டு அருகே தரசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள் (வயது 23) ராகுல் 22 சிவதாஸ். இவர்கள் மூன்று பேரும் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மின்கம்பிகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மூன்று பேரும் நேற்று இரவு வானூர் அருகே உள்ள கடைப்பேரி குப்பம் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். மேலும் அந்த விவசாய நிலத்தில் உள்ள மின்சார கம்பத்தில் அருள் என்பவர் ஏறி மின் கம்பிகளை திருட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த இவரது நண்பர்கள் ராகுல் சிவதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வானூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள் உடலை கைப்பற்றி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.