களக்காட்டில் நகராட்சி சார்பில் சந்தை அமைக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
- களக்காடு நகராட்சியில் உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
- நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க களக்காட்டில் நகராட்சி சார்பில் சந்தை அமைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.
களக்காடு:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன், லெனின் முருகானந்தம், அயூப்கான், திருமணி, ஸ்ரீதர், கோசிமின் மற்றும் நிர்வாகிகள் களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், துணை தலைவர் ராஜன் ஆகியோரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கோழிக்கால், தலையணை பகுதிகளில் நீரோட்டம் உள்ள இடத்தில் உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க களக்காட்டில் நகராட்சி சார்பில் சந்தை அமைக்க வேண்டும். நகராட்சி சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நகராட்சிக்கும் வருமானம் அதிகரிக்கும்.
களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் உள்ள தரை பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே தரைபாலத்தை அகற்றி விட்டு புதிய உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.