கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி கடத்திய 3 பேர் கைது
- லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- லாட்டரி கடத்தி வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்கப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் அங்கிருந்து அதிகளவில் லாட்டரி சீட்டுகள் தமிழக பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கூலித்தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது.
லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த சவுடையன்(56), திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த சூசைஆரோக்கியம்(66), மதுரை பேரையூரை சேர்ந்த நாராயணன்(74) என்பதும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.