தியாகதுருகம் அருகே நிலத்தகராறில் மோதல்- 6 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியதுரை (25) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று மணிகண்டன் பிரச்சினைக்குரிய இடத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் திட்டி, தாக்கிக் கொண்டனர். இதில் மணிகண்டன் மற்றும் கலியதுரை ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கலியதுரை, அவரது தந்தை பெரியசாமி, தாய் கலியம்மாள் ஆகியோர் மீதும், இதே போல் கலியதுரை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் ராதா, அம்சவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.