உள்ளூர் செய்திகள்
கோவையில் ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
காதலை ஏற்க இளம்பெண் மறுத்ததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருேக உள்ள சுகுணாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் முருகேசன்.தச்சு தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 17).
இவர் கடந்த வருடம் வால்பாறையில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். தற்போது சக்திவேல் கல்லூரிக்கும் செல்லாமல், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது தந்தை வேலைக்கு சென்று இருந்தார். தாய் தனது மகளை நர்சிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சக்திவேல் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் நான் ஒரு பெண்ணை கடந்த சில வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்தேன். பலமுறை அந்த பெண்ணை சந்தித்து காதலை சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை என எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.