வங்கி கணக்கில் ஓய்வூதியம் - பூசாரிகள் கோரிக்கை
திருப்பூர்:
வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் அனுப்ப வேண்டுமென, ஓய்வு பெற்ற கோவில் பூசாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:-
கிராமப்புற கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், உதவி ஆணையர் அலுவலகத்தில் கிடைத்து வந்தது. அதுவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைத்தது. இதனால், வயதான பூசாரிகள் சிரமப்பட்டு வந்தனர். கிராமப்புற கோவில் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வு குழு கூட்டம் சமீபத்தில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
அதில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் ஓய்வு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். இதனால் ஓய்வுபெற்ற பூசாரிகளின் வங்கி கணக்குக்கு, நேரடியாக ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 3,500க்கும் அதிகமான பூசாரிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.