ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
ஊத்துக்கோட்டை:
சென்னை அமைந்தகரை எம்.எம். டி. ஏ. காலனியை சேர்ந்தவர் சேதுபதி (வயது23) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சேதுபதி நேற்று மாலை நண்பர்கள் 3 பேருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு அருகே உள்ள மதனம்சேரி பகுதிக்கு சென்றார்.
பின்னர் அனைவரும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர். தற்போது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் கிருஷ்ணா கால்வாயில் அதிக அளவு நீர் பாய்ந்தது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் சேதுபதியை மீட்க முடியவில்லலை. இந்த வெள்ளத்தில் சேதுபதி அடித்து செல்லப்பட்டார். மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து சேதுபதியின் உறவினர்கள் சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலிஸார் அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஸ்ரீராமகுப்பம் கிராம எல்லையில் கிருஷ்ணா கால்வாயில் இன்று காலை சோதுபதியின் உடல் கரை ஒதுங்கியபோது போலீசார் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.