உள்ளூர் செய்திகள்
சீமான்

விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா?- சீமான் கண்டனம்

Published On 2022-05-21 04:59 GMT   |   Update On 2022-05-21 08:34 GMT
நாகரீகமும், தொழில் நுட்பமும் வளர்ந்துள்ள 21-ம் நூற்றாண்டிலும் இடுகாட்டில் சாதி பார்த்து, புதைக்க இடமளிக்க அனுமதி மறுக்கும் சமூகத்தின் அவல நிலைகண்டு வெட்கித் தலை குனிகிறேன்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதாவின் இறந்த உடலைப் புதைக்க இடம் தராத அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சாராரைக் கண்டித்தும், நிலையான இடுகாடு அமைத்துத்தர வலியுறுத்தியும் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு, 3 நாட்களாக அவரது உறவினர்கள் நடத்தி வரும் அறப்போராட்டம் குறித்தான செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன்.

அப்பகுதியைச் சேர்ந்த கோட்டாட்சியர் உடலைப் புதைக்க இடமளித்தும், அவ்விடத்திலும் புதைக்க விடாமல் எதிர்ப்புத் தெரிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாகரீகமும், தொழில் நுட்பமும் வளர்ந்துள்ள 21-ம் நூற்றாண்டிலும் இடுகாட்டில் சாதி பார்த்து, புதைக்க இடமளிக்க அனுமதி மறுக்கும் சமூகத்தின் அவல நிலைகண்டு வெட்கித் தலை குனிகிறேன்.

சாதியையும், சாதியின் பெயரால் நடந்தேறும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதன்பொருட்டும் ஏற்க முடியாது. இறந்தவரின் உடலைப் புதைக்க அனுமதி கேட்டு 3 நாட்களாகப் போராடி வரும் அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டியது அரசின் தார்மீகக்கடமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு உடனடியாகத் தலையிட்டு, இறந்துபோன அம்மா அமுதாவின் உடலை நல்லடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளையும், பாதுகாப்பினையும் செய்துதர வேண்டுமெனவும், போராடிவரும் ஆதித்தொல்குடி சமூகத்தினருக்கு நிரந்தரமான இடுகாட்டினை ஏற்படுத்தித் தர தகுந்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா ராணுவம்

Tags:    

Similar News