உள்ளூர் செய்திகள்
பீடிக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.

ஆலங்குளம் அருகே பி.எப். கணக்கில் பணம் செலுத்தக்கோரி பீடிக்கடையை பெண்கள் முற்றுகை

Published On 2022-05-20 09:32 GMT   |   Update On 2022-05-20 09:32 GMT
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பி.எப். கணக்கில் பணம் செலுத்தக்கோரி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் பீடி நிறுவனம் ஒன்று பீடிக் கடை நடத்தி வருகிறது. இங்கே உள்ள 2  கிளைகளிலும் தலா 500 பெண்கள்  பீடி சுற்றி வருகிறார்கள்.

கடந்த 15 மாதங்களாக இவர்களது பி.எப். கணக்கில் பீடிக்கடை நிர்வாகம் பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று 2 கிளை கடைகளின் முன்பும் பெண்கள்  திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சாலையில்  அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

15 மாதங்களாக செலுத்தாமல் உள்ள தொகையை உடனடியாக பி.எப். கணக்கில் செலுத்த வேண்டும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் தொகையை உடனடியாக மாதம்தோறும் வழங்க கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தின்போது  கடை நிர்வாகம் அதன் காண்ட்ராக்டரை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

 பணி நீக்கம் செய்யப்பட்ட அதே காண்ட்ராக்டரை மீண்டும் அதே கிளையில் பணியமர்த்த கோரி இன்று சுமார் 200-க்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்கள் அந்த கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News