உள்ளூர் செய்திகள்
அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படாததால் விவசாயிகள் அவதி
வத்திராயிருப்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படாததால் விவசாயிகள் அவதி அடைகின்றனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி. கான்சாபுரம்,மகாராஜபுரம்,சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை கால நெல் சாகுபடி செய்து கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அறுவடை பணியினை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.
இது குறித்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறும்போது,
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடை கால நெல் சாகுபடி செய்து தற்போது கடந்த ஒரு வார காலமாக அறுவடை பணியை தொடங்கியுள்ளோம்.இப்பகுதியில் அறுவடை தொடங்கிய உடனே அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.அரசு நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே நாங்கள் நெற்பயிர்களை விற்பனை செய்வதால் போதிய லாபத்தினை அடைய முடியவில்லை.
எனவே இப்பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து திறக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.