search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffer"

    • விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை
    • போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

    கோவை,

    கோவை மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் தலைமை அலுவலக டெப்போ, ஒண்டிப்புதூர், சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூருக்கு எண்ணற்ற அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாநகர அளவில் காந்திபுரம், டவுன்ஹால், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இருந்து தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் மேற்கண்ட அரசு பஸ்கள் சரியான நேரத்தில் குறித்த காலத்தில் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

    மேலும் நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, கத்தரிக்காய், கீரை வகைகள் ஆகியவற்றை அரசு பஸ்கள் மூலம் உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    ஆனால் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் சரிவர இயக்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகள் தோட்டத்தில் உள்ள விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்து உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோவை போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்து உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை கொண்டு செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ் போக்குவரத்து குறித்த நேரத்தில் வராததால் பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தற்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 மாதங்களாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், பல ஆயிரம் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கூட தினமும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுகிறது.

    பொதுவாகவே லேசான மழை தூறல் ஏற்பட்டாலே நீலகிரியில் மின்தடை ஆவது சர்வ சாதாரணமான விஷயம் என மக்கள் பழகி விட்டனர். ஆனால் கடந்த இரண்டொரு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும்.
    • கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

    காங்கயம்:

    தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும். சில நேரங்களில் இந்த உரங்களுக்கான தட்டுப்பாடு இருக்கும். ஆனால் அதைச்சார்ந்து வேறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இணை உரப்பிரச்சினை பாடாய்படுத்துகிறது.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம், விற்பனையாளர்கள் டி.ஏ.பி. ஒரு மூட்டை வேண்டுமெனில் அதே கம்பெனியின் மற்றொரு உரம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.

    இதனால் ஆங்காங்கே விவசாயிகள் உரவிற்பனைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினர். அத்துடன் இதுபற்றிய தகவல் வேளாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டு வேளாண்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.

    குறிப்பாக வெங்காய சாகுபடி சீசன், மக்காச்சோள சாகுபடி சீசன் தொடங்கிவிட்டால் போதும் இந்த பிரச்சினையும் தொடங்கிவிடும்.

    காங்கயம், தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொன்னாபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி. அமராவதி தண்ணீரைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். மக்காச்சோளத்திற்கு முதல் உரமாக யூரியா கொடுப்பது வழக்கமாக உள்ளது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்கி யூரியாவின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த இணை உரப்பிரச்சினையை உரநிறுவனங்கள் தொடங்கி விடுவர். அதே போல அடுத்த சில மாதங்களில் வெங்காயம் சாகுபடி தொடங்கும் நேரத்தில் டி.ஏ.பி.யின் தேவை அதிகரிக்கும். அப்போதும் இந்த பிரச்சினை தொடங்கிவிடும்.

    இது பற்றி விவசாயிகள் கூறுகையில்,கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் முன்னதாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக உர விற்பனையாளர்கள் கூறுகையில் ,நாங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இல்லையெனில் ஸ்டாக் தர மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி அந்த உரங்களை வாங்க வேண்டி உள்ளது.

    அதனால் வேளாண்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரவிற்பனையாளர்கள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றனர்.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
    • மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.

    எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவு நீருடன் மழை நீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம்
    • குடியிருப்புவாசிகளே பொக்ளைன் வரவழைத்து கழிவு நீரை வெளியேற்றினர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.இந்த நிலையில் திருநகர் மெயின் ரோடு பகுதியில் நடைபெறும் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்தனர். இதனால் கடந்த சில தினங்களாக திருநகர் 5,6,7 கிராஸ் பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் தேக்கமடைந்தது. இதற்கிடையே நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே நிரம்பியிருந்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து விட்டது.இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக குடிநீர் பைப் அமைந்துள்ள பகுதிகளிலும் சாக்கடை நீர் நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறும்போது,மெயின் ரோட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இப்போது வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் வந்துவிட்டது.இன்னும் இந்தபணிகள் இரண்டு வாரத்துக்கு நீடிக்கும் என சொல்லப்படுகிறது.எனவே கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது கழிவுநீரை வேறு வழியில் திருப்பிவிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று அவ்வப்போது எங்கள் பகுதிக்கு குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.நேற்று பெய்த கனமழையின் போது குடியிருப்பு வாசிகளாகிய நாங்களே ஒரு ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து ஒரு பகுதியில் சாக்கடை நீரை உடைத்து வெளியேற்றினோம் என்றனர்.

    • பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாவூர்சத்திரம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர். பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் கூடுதலாக தண்ணீரை தெளித்து சாலை அமைக்கவும், தென்காசியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெறும் சாலை பணியில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், சாலை பணி நடைபெறுவதை குறிக்கும் எச்சரிக்கை பலகையும் பயன்படுத்தப்படவில்லை. எனவே அவைகளை முறையாக அமைத்து வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லை எனில் பாவூர்சத்திரம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டை சுற்றியுள்ள கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்தமங்கலம், திருப்பாக்கோட்டை, அதங்குடி, கண்ணங்குடி, சிறுவாச்சி, ஆறாவயல், உஞ்சனை, புதுவயல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    தேவகோட்டையில் 10- க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் வந்து செல்ல இந்த பஸ்களை நம்பியே உள்ளனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்களில் டயர்கள் மோசமான நிலையிலும், தரம் குறைந்தும் உள்ளன.இந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ்களின் அவல நிலை குறித்த வீடியோவை அரசு பஸ் டிரைவர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    தற்போது தினமும் 5-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு பஸ் வரவில்லை என்றால் அன்று மாணவ, மாணவிகள் விடுமுறை தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்ல மாலை நேரத்தில் பஸ் இல்லாததால் சில நாட்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

    இது பற்றி அரசு போக்குவரத்து கழக பணியாளர் கூறுகையில், ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இலவச பயணத்தால் டவுன் பஸ்களில் வசூல் குறைவாக இருக்கிறது.

    இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. உடனடியாக ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.அரசு டவுன் பஸ்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
    • மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பல நாட்கள் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

    இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    அதுமட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் பலர் ரத்த அழுத்த நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் சிகிச்சை எடுக்க வந்தவர்கள். இதனால் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 9.15 மணிக்கு மருத்துவர் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதே போல் இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்காததால் இரவு நேரங்களில் வரக்கூடிய அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ராதாபுரம் ஒன்றிய பா.ஜ.க. ஊடக தலைவர் காமராஜ் கூறியதாவது: -

    ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தான் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் மருத்துவர்கள் இருப்பதே கிடையாது. மருத்துவர்கள் உரிய நேரத்திற்கும், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கும் வருவதும் கிடையாது.

    இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடை வீதியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர்.

    அவர்களில் சிலர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முயன்ற போது அது பூட்டி இருந்தது. இதுகுறித்து அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவும் பூட்டி இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ,சாமி தரிசனம் செய்ய வரும் நேரங்களில் சுகாதார வளாகத்தை பூட்டி விட்டு அலுவலகத்தையும் பூட்டிவிட்டு அதிகாரிகள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.

    பதில் சொல்லவும் ஆளில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×