search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் தலைமை அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள் இல்லாததால்  நோயாளிகள் அவதி
    X

    மருத்துவமனையில் காத்திருக்கும் பொதுமக்கள்.


    ராதாபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

    • நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
    • மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பல நாட்கள் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

    இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    அதுமட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் பலர் ரத்த அழுத்த நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் சிகிச்சை எடுக்க வந்தவர்கள். இதனால் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 9.15 மணிக்கு மருத்துவர் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதே போல் இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்காததால் இரவு நேரங்களில் வரக்கூடிய அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ராதாபுரம் ஒன்றிய பா.ஜ.க. ஊடக தலைவர் காமராஜ் கூறியதாவது: -

    ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தான் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் மருத்துவர்கள் இருப்பதே கிடையாது. மருத்துவர்கள் உரிய நேரத்திற்கும், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கும் வருவதும் கிடையாது.

    இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×